
சித்திரை புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு ஆகிய மூன்று பண்டிகைகளும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவது, இந்திய சமூகத்தின் ஆன்மீக அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பாக அமைகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ், சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினரால் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள், மலேசியாவின் கலாச்சார செழுமையை வெளிப்படுத்துவதோடு, பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் ஒரு வலுவான பாலமாகவும் விளங்குகின்றன என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஒவ்வொரு பண்டிகையிலும் ஆன்மீக விழுமியங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். புத்தாண்டு என்பது சுயபரிசோதனை செய்யும் தருணமாகும். நமது எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி, நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய காலமாகும்,” என்றார்.
இந்த பண்டிகைகள் ஒவ்வொன்றும், “இருளை வெல்லும் ஒளி, அதர்மத்தை வெல்லும் தர்மம்” என்ற உயர்ந்த செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இது கடந்த காலத் தவறுகளை மறந்து, தூய்மையான மனதுடனும் இறைபக்தியுடனும் புதிய தொடக்கத்தை உருவாக்கும் நேரமாகும்,” என்று மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.



