
நோய்த்தொற்று காலத்தில் எஸ்ஓபி விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு 10 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தற்போது நடப்பிலுள்ள சட்டத்தின்கீழ் எஸ்ஓபி விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஆகவே 342 சட்டத்தில் திருத்தம் செய்யும் பரிந்துரையை அமைச்சரவை கூட்டத்தில் முன் வைக்கப் போவதாக அவர் சொன்னார். கடந்த வாரம் இறுதியில் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மலேசியக் குடும்ப விழாவில் எஸ்ஓபி விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தொடர்பில் அதன் ஏற்பாட்டாளருக்கு ஆயிரம் வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
