
இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வாகன தொடர் இதனால் மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட நிகழ்வு, கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பியவுடன் அங்கு தமது பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோதி, “என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்” என்று கூறி தலைநகர் புதுடில்லிக்கு திரும்பி இருக்கிறார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு மாநில அரசே காரணம் என்றும் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
