30.1 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

பெட்டாலிங் ஜெயாவில் பொது மருத்துவமனை- மாநில அரசு பரிசீலனை

பெட்டாலிங் ஜெயாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும்  தற்போதுள்ள சுகாதார மையங்களில் நீண்ட காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும் ஏதுவாக அங்கு   பொது மருத்துவமனையைக் கட்டும் திட்டத்தை  மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

தற்போது ஷா ஆலம் மருத்துவமனையில் நோயாளிகளின் நெரிசல் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் ஒரு புதிய மருத்துவமனையின் தேவையை மதிப்பிடுவதற்கு மாநில அரசு சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து வருவதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவின் கிழக்குப் பகுதியில் ஒரு மருத்துவமனையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது பொருத்தமான மாற்று வழிகளை ஆராய்வதற்காக மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கு முன் சுகாதார அமைச்சுடன்  உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று அவர்  நேற்று சட்டமன்றத்தில்   கூறினார்.

தற்போது, ​​ பெட்டாலிங் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு  மிக அருகில் உள்ள பொது மருத்துவமனையாக விளங்குவது ஷா ஆலம் மருத்துவமனையாகும்.

அதே நேரத்தில் ஒரு போதனா மருத்துவமனையாக விளங்கும்
மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (யு.எம்.எம்.சி.) மாவட்டத்தில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மற்றொரு  மருத்துவமனையாகும்.

இருப்பினும், மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி  யு.எம்.எம்.சி ஆலோசக,  நுழைவு  மற்றும் சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதாக  அண்மையில் அறிவித்தது.

இந்த கட்டண உயர்வு   பொது சுகாதாரத்திற்கான அதிக செலவுகளைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதால் இது பெட்டாலிங் ஜெயா  குடியிருப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஒரு புதிய பொது மருத்துவமனையை கட்டுவதில் உள்ள முதன்மையான சவால்களில் ஒன்று நிலத்தைப் பெறுவதாகும். ஏனெனில் அது சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான நிலத்தில் மருத்துவமனை  உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு 15 முதல் 20 ஏக்கர் தேவைப்படும் என்றும் ஜமாலியா கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles