
போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியரான 33 வயது நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் அவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற மனித உரிமை இயக்கங்கள் போராடி வருகின்றன. தற்போது நாகேந்திரனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்ய மனுதாக்கல் செய்த நாகேந்திரன், தமக்கு அறிவாற்றல் குன்றியநிலை இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். 33 வயது என்றபோதிலும் தமக்கு 18 வயது இளையரின் அறிவாற்றல் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். அறிவாற்றல் குன்றியோரை சிங்கப்பூர் சிறைத் துறை தூக்கிலிடுவதில்லை என்று தமது மனுவில் அவர் குறிப்பிட்டார். இதைச் சிறைத் துறை மறுத்து விட்டது. நாகேந்திரனுக்கு 18 வயது இளையரின் அறிவாற்றல் இருப்பதற்கு நம்பகமான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீதிபதி சீ கீ ஓன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற போராடி வருகிறோம் என்று மனித உரிமை கழகங்கள் அறிவித்துள்ளன.
