
135 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து சைபர் ஜெயாவில் உள்ள ஸ்ரீ புத்ரி பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் துப்பரவு மற்றும் கிருமிநாசினி தெளிப்பு பணிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை பள்ளியைச் சேர்ந்த 973 பேர் பரிசோதிக்கப்பட்ட வேளையில் 135 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. 114 மாணவர்கள், 19 ஆசிரியர்கள் மற்றும் 10 பள்ளி ஊழியர்கள் அடங்கியோருடன் சேர்த்து நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143 பேராக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
