
புத்தாண்டு தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஏவுகணையை வடகொரியா கடலுக்குள் செலுத்தியதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானால் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை ஏவுகணை பற்றிய உறுதியான தகவல் தெரியவில்லை. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ய ஐ.நா தடை விதித்துள்ள நிலையில், வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்ந்துள்ளது.
