
கொவிட்-19 நோய்க் கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட எந்தத் தனிநபரையும் தனிமைப்படுத்தும் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பான முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
கொரோனா தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களைத் தனிமைப்படுத்தும் நடைமுறையை ரத்து செய்வதற்கான முடிவு தற்போது பொது சுகாதார சேவைத் துறையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
பிப்ரவரி 15-ஆம் தேதி சுகாதாரப் பணியாளர்களுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து இம்முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே கொவிட்-19 சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
