
கிள்ளான், தாமான் கிள்ளான் ஜெயாவில் ஒரு விட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் காரணமாக பக்கத்து வீடு பாதிப்புக்குள்ளானதன் தொடர்பில் இரு வீட்டினருக்கும் இடையே எழுந்த பகை சமூக வலைதளத்தில் கருத்து பரிமாறும் அளவிற்கு சென்றுள்ளது.
எனவே, இந்தச் சிக்கல் குறித்து விவாதிக்க விரைவில் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறியுள்ளார்.
2012 முதல் நீடித்து வரும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட இரு வீடுகளின் உரிமையாளர்கள், கிள்ளான் நகராண்மைக் கழக அதிகாரிகள் ஆகிய தரப்பினரை உள்ளடக்கி இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை 3 ஆண்டுகளுக்குமுன் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எனினும், நீதிமன்றத் தீர்ப்பு புகார்தாரருக்கு பாதகமாக அமைந்து விட்டதாகவும் கிள்ளான் நகராண்மைக் கழக அனுமதியுடன் புனரமைப்பு பணியை மேற்கொண்டுவரும் அண்டை வீட்டுக்காரர் கடந்த 2020 ஜூன் மாதம் இதன் தொடர்பான சிவில் வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
