
துன் மகாதீர் 2-வது முறை பிரதமராக இருந்தபோது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மீது மட்டும் வழக்கு தொடர்ந்து பழிவாங்கத் துடித்தாரேத் தவிர, தன்னுடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அல்ட்ரா கிரானா நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்றதாகக் கூறப்படுவது குறித்து கண்டும் காணாமல் இருந்து விட்டார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரஃபி கொதித்துள்ளார்.
நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது மகாதீருக்கு நோக்கமல்ல; தனக்கு எதிரானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்ததாலும் முகைதீன் மகாதீரின் கூட்டாளியாக இருந்ததாலும் அவர்மீது குற்றம் சாட்டப்படாமல் மகாதீர் விலக்கிவிட்டார் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளை முகைதீனும் எதிர்கொள்ள வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் முகைதீன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஸ்லான் ரஃபி கேட்டுக்கொண்டுள்ளார்.
