
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் பழமைவாத கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, பிரதமர் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். இதையடுத்து, பிரதமர் பதவிக்கு போட்டியிட, முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, ரிஷி சுனக் ஆதரவு திரட்டத் துவங்கியுள்ளார்.
கட்சியின் புதிய தலைவரே , பிரதமராக முடியும் என்பதால் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போட்டியில் முதலிடத்தில் உள்ள ரிஷி சுனக் உட்பட, 10 பேர் களமிறங்கியுள்ளனர்.
பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால், மக்களிடம் கட்சி இழந்த நம்பிக்கையை மீட்பது, விலைவாசியை கட்டுப்படுத்துவது, நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதே என் நோக்கம் என, ரிஷி சுனக் கூறியுள்ளார்.
பிரதமர் போட்டியில் நேற்று வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் குதித்தார். ரிஷி சுனக்கிற்கு அடுத்து இவருக்குக் கட்சியில் ஆதரவு உள்ளது. முன்னாள் அமைச்சர்களான பாகிஸ்தான் வம்வசாளியைச் சேர்ந்த சஜித் ஜாவித், ஜெர்மி ஹன்ட், கிரான்ட் ஷாப்ஸ், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மன், ஈராக் வம்சாவளியான நதிம் ஸாஹவி, நைஜீரிய வம்சாவளியான கெமி பெடநாச், டாம் டுகன்டட் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
