
அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகள் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தைவான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும். தைவான் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு குறுக்கீட்டையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். இதை அமெரிக்க தரப்பு புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன். இவ்வாறு ஜின்பிங் கூறினார்.
