
பறிமுதல் செய்யப்பட்ட 2,000-கும் அதிகமான நகைகளையும், 29 ஆடம்பர கைப்பைகளையும் திரும்ப ஒப்படைக்கக் கோரி தொடுத்திருக்கும் வழக்கிற்காக, டத்தின் ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் மீண்டும் இம்மாத இறுதியில் நீதிமன்றத்திற்குத் திரும்புவார். அந்த வழக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளான செப்டம்பர் 26, 27-ஆம் தேதிகளில் செவிமடுக்கப்படுமென, ரொஸ்மாவின் வழக்கறிஞர் Azamuddin Abdul Aziz தெரிவித்திருக்கிறார். 2018 மே-யில், தலைநகரில் உள்ள Pavilion Residences- சில் உள்ள வீட்டில் இருந்து, போலீசார் 90 கோடி ரிங்கிட்டிலிருந்து 110 கோடி ரிங்கிட் மதிப்பிலான, நகைகள், கைக் கடிகாரங்கள், மூக்குக் கண்ணாடிகள், 306 கைப்பைகள் முதலிய பொருட்களைப் பறிமுதல் செய்தனர். 1MDB மோசடி தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக நம்பப்பட்ட அந்த பொருட்களில், 2,000 அதிகமான நகைகளும் 29 கைப்பைகளும் இன்னும் அரசாங்கத்தின் வசம் இருக்கும் நிலையில், எஞ்சிய பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டன.
