
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை ம.இ.கா கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவரான டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். துன் சம்பந்தன் காலத்திலிருந்து ம.இ.கா வசமிருந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை பின்னர் துன் சாமிவேலு தொடர்ந்து தற்காத்து வந்தார். எனினும் 2008-ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் சுங்கை சிப்புட் தொகுதியை பி.எஸ்.எம் கட்சியின் டாக்டர் எம். ஜெயக்குமாரிடம் துன் சாமிவேலு இழந்தார். அதன் பிறகு இரண்டு பொதுத் தேர்தல்களிலும் சுங்கை சிப்புட் தொகுதியை கைப்பற்றும் ம.இ.காவின் முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும் எதிர்வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் அந்த தொகுதியை வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து ம.இ.கா தொடர்ந்து பல்வேறு செயல் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
