
இருமலுக்காகவும் பாதத்தில் ஏற்பட்ட அரிப்பிற்காகவும் ஒரு தனியார் கிளினிக்கை நாடிய ஒருவர் மருத்துவரை சந்தித்துவிட்டு, அங்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தையும் பெற்றபின் முகப்பிட சேவையில் இருந்த பெண் வழங்கிய கட்டண ரசிதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கோலாலம்பூரில் இருந்து ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக பினாங்கிற்கு சென்ற அவர் சிறு அளவிலான உடல்நல பாதிப்பிற்காக பினாங்கு, பட்டர் வொர்த், பாகான் ஆஜாமிலுள்ள ஒரு பிரபலமான இந்தியரின் கிளினிக்கு சென்றுள்ளார். பி-40 குடும்பத்தைச் சேர்ந்த வேலையில்லாத அவர் 60 வயதைக் கடந்தவர். பொதுவாக எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாதாரண மருத்துவத்திற்காக 4 தடவை அந்தக் கிளினிக்குச் சென்றால் வெ.ஆயிரத்துக்கு மேல் செலவாகும். இந்த நிலை எங்கும் நிலவினால் சாதாரண மக்கள் வாழ்வது எப்படி? எனவே, இந்த விவகாரத்தை சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தால் சமுதாயத்திற்கு நன்மை விளையும்.
