
கோவிட் 19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு நாடு தற்போது மீட்புக் கட்டத்தில் உள்ளது. ஆனாலும் மலேசியர்கள், குறிப்பாக வர்த்தக சமூகத்தினர் பணவீக்கம், மலேசிய நாணய வீழ்ச்சி, வீடு-வாகன கடனுக்கான வட்டிவிகிதOPR) அதிகரிப்பு போன்ற காரணங்களால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதால், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட சிலாங்கூர் மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரி டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில், சிலாங்கூர் மாநிலத்தில் கிராம புரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வர்த்தகர்களுக்கு வர்த்தக உரிமக் கட்டணத்தில் இருந்தும் மலிவு விலை வீட்டு உரிமையாளர்களுக்கு சொத்து மதிப்பீட்டு வரியில் இருந்தும் விலக்களிக்க சிலாங்கூர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்தகையத் திட்டத்தை அமல்படுத்துவது இது எட்டாவது ஆண்டாகும். 2016-ஆம் ஆண்டு முதல் இந்த சமூக நலத்திட்டம் மாநில அரசால் அமல்படுத்தப்படுகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் நலத் திட்டத்தை நடைமுறை ப்படுத்துவதால், 2023ஆம் ஆண்டில் மட்டும் சிலாங்கூர் மாநில அரசுக்கு வெ.68.74 மில்லியன் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் சிலாங்கூர் மாநில அரசு இந்த சவாலை எதிர்கொண்டு, வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள இந்த வேளையில் மக்களுக்கு துணையிருக்க உறுதிபூண்டுள்ளது என்று பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான குணராஜ் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
