
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.09:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் ஏற்றுள்ள செம்மாந்த தலைமைக்கு அடுத்த ஆண்டு பொன் விழா ஆண்டாகும்.
அவரின் தலைமையில் 1992-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா, 30-ஆம் ஆண்டாக வரும் 14-ஆம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என்று கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டுவரும் படைப்பாளார்களை, குறிப்பாக சிறுகதை, மரபுக் கவிதை, கட்டுரை, புதுக்கவிதைப் பிரிவுகளில் தொடர்ந்து எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இலக்கியப் போட்டி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழிலக்கியப் படைப்பாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை அனுப்பி இருந்தனர். இது, மிகவும் ஊக்கம் அளிக்கிறது.
இந்தப் பரிசளிப்பு விழா, 14-10-2022 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி டத்தோ சகாதேவன் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
