
தற்போதுள்ள அம்னோ தலைவர்கள் இனத்துக்காகவும் சமயத்துக்காகவும் சேவை செய்கிறோம் என்ற போர்வையில், கோடி கோடியாய்க் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கின்றனர்.
அதில் முக்கிய தலைவர் ஒருவர் 42 மில்லியன் எஸ்ஆர்சி நிதியைத் தமது சொந்த வங்கிக் கணக்கில் வரவு வைத்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும், தாம் குற்றமே செய்யவில்லை என்று சாதித்து மக்களின் அனுதாபத்தைப் பெறுவதில் குறியாக செயல்பட்டு வருகிறார்.
பண்டோரா பேப்பர்ஸின் வழி பல அம்னோ தலைவர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணம் பற்றி விசாரிக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி உறுதி கூறினாலும், அதற்கு எப்போது உத்தரவிடுவார் என்பது அவருக்கே தெரியாது. அம்னோ தலைவர்களைக் கேட்டுத்தான் அவரின் தலை ஆடும்.
கிராமப்புற தொழிலாளர்கள், குடியானவர்கள், மீனவர்கள் போன்றோர் ஒட்டுக் குடிசையில் வாழும் நிலையில், நமது அரசியல் தலைவர்கள் மாட மாளிகையில் குடியிருக்கின்றனர். அவர்கள் வாக்களர்களுக்கு சேவகம் செய்பவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய, மக்கள் அவர்களுக்குச் சேவகர்களாக இருக்கக் கூடாதென அன்வார் கேட்டுக் கொண்டார்.
