
மலேசிய இந்து சங்க தலைமைத்துவ சிக்கல் தொடர்பான வழக்கு மூன்றாவது முறையாக அக்டோபர் 11-ஆம் நாள் கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டத்தோ மோகன் சண்முகத்தின் மனு நிராகரிக்கப் பட்டது.
மலேசிய இந்து சங்கத்தின் 45-ஆவது தேசிய ஆண்டுக் கூட்டம் கடந்த 24-07-2022இல் நடைபெற்றபோது, ‘சிவ நெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தலைமையில் 13 ஆண்டுகள் தலைவராக இருந்த மோகன் சண்முகத்திற்கு எதிராக ‘மாறுவோம்; மாற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் களமிறங்கிய 10 பேரும் 1,000 வாக்குகளுக்கு நெருக்கமாகப் பெற்று மாபெரும் பெற்றி அடைந்த நிலையில் மோகன்சண்முகம் தலைமையில் போட்டிட்ட 10 பேரும் படுதோல்வி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதே ஆண்டுக் கூட்டத்தில் நடைபெற்ற முதல் மத்திய செயலவை கூட்டத்திலும் சிவநெறிச் செல்வர் தங்க. கணேசன் மிகப் பெரும்பான்மை ஆதரவுடன் மலேசிய இந்து சங்க புதிய தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் 13 ஆண்டுகால தலைவர் பதவியை இழந்த மோகன் சண்முகம், மத்திய செயலவையில் இருந்தும் விலகுவதாக இந்து சங்க உறுப்பினர்களின் முன் அறிவித்துவிட்டு, மண்டபத்தைவிட்டு வெளியேறினார்.
அனைவரும் கரவொலி எழுப்பி அவரை வழியனுப்பி வைத்தனர். அப்போது, மோகன் சண்முகத்தின் நெருங்கிய ஆதரவாளர் விலாயா மாநில பாலகிருஷ்ணன் உட்பட மற்ற நால்வரும் மோகன் சண்முகத்தைப் பின்பற்றி மத்திய செயலவையில் இருந்து விலகினர்.

இந்த நிலையில், அடுத்த 2 நாளில், இந்து சங்க ஆண்டுக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்றும் அதனால் தானே இன்னமும் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டு, இந்து சங்க தலைமையகத்தை வல்லடியாக ஆக்கிரமித்து, பூட்டை உடைத்து உள்ளே சென்றது மோகன் சண்முகமும் அவரின் தரப்பும்.
இந்த நிலையில், இந்து சங்க உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் ஜனநாயக முறையில் வென்ற தங்க. கணேசன் அணியினர் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடினர்.
இதை எதிர்த்து மோகன் சண்முகம் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனுவில், தங்க கணேசனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர்.
இதன் தொடர்பில், ஆகஸ்ட் 09, செப்டம்பர் 28 என இரு கட்டங்களில் விசாரணை நடைபெற்று, மூன்றாவது முறையாக அக்டோபர் 11-இல் விசாரணைக்கு வந்தபோது, மோகன் சண்முகம் & நால்வர் செய்துகொண்ட எதிர்மனுவை கோலாலம்பூர் உயர்நீதி மன்ற நீதி ஆணையர் வான் முகமட் அமின் பின் வான் யாஹ்யா தள்ளுபடி செய்தார்.
அத்துடன், ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தரப்பினரின் முறையீட்டை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இது தொடர்பான தீர்ப்பு, தீபாவளிக்கு அடுத்தத் திங்கட்கிழமை (31-10-2022) அறிவிக்கபடும் என்றும் நீதி ஆணையர் வான் முகமட் அமின் பின் வான் யாஹ்யா கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த 9-08-2022-இல் மோகன் சண்முகம் தரப்புக்கு எதிராக அளிக்கப்பட்ட இடைக்கால தடை தொடர்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
