
🔊To listen to this news in Tamil, Please select the text.
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளளனர். தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெய்சுக் படேலை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதையடுத்து, ஜெய்சுக் பட்டேல் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10வது நபர் ஜெய்சுக் படேல் ஆவார். முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில் துணை ஒப்பந்ததாரர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அடங்குவர்.
