
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக ஈராண்டுகள் நடத்தப்படாமல் இருந்த தைப்பூசத் திருவிழா, நாடெங்கிலும் முருகன் திருத்தலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பத்துமலை தைப்பூசத்தில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல்களுக்கான காணிக்கையைச் செலுத்தினர்.
பால் குடம் ஏந்தியும் பெரிய பெரிய காவடிகளைத் தோளில் சுமந்தும் நூற்றுக் கணக்கானோர் பத்துமலையின் 272 படிகளையும் ஏறி, தங்களின் காணிக்கையைச் செலுத்தியது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
மக்கள் கூட்டம் அலைதிரண்டு வந்து தடங்கலை ஏற்படுத்தி இருந்தாலும், பக்தர்கள் அதனை ஒரு தடையாகக் கருதாமல், முருகப் பெருமானை தரிசித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்தத் திருநாள் அதிகாரப்பூர்வமாக சனிக்கிழமை இரவே தொடங்கிய வேளையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடும் வெயிலும், மாலையில் கனத்த மழை பெய்ததையும் பொருட்படுத்தாத மக்கள், முருகப் பெருமானை தரிசிக்க, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற, முடி காணிக்கைச் செலுத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பக்தர்களுக்கிடையே, நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் நாட்டில் வேலை செய்யும் அந்நிய நாட்டவர்களும் இத்திருவிழாவில் கலந்து கொண்டதைப் பார்க்க முடிந்தது.
நாட்டில் அனுசரிக்கப்படும் தைப்பூசத் திருவிழா தங்களுக்குப் பெரும் அதிசயமாக, ஆச்சரியமாக இருப்பதாகவும், தாங்கள் இதில் கலந்து கொள்வதைப் பெருமையாகக் கருதுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் வியந்து குறிப்பிட்டனர்.
