31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

உள்நாட்டு போர் உச்சகட்டம்- சூடானில் குழந்தைகள் உள்பட 413 பேர் கொலை

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஆப்பிரிக்கா நாடான சூடானில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்குள்ள ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அங்கு சண்டை ஓய்ந்தபாடில்லை.

தலைநகர் கார்ட்டூம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வருவதாகவும் , குண்டு மழை பொழிந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தொடர் சண்டை நடந்து வருவதால் பொதுமக்கள் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த போரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த சண்டைக்கு இதுவரை 413 பேர் இறந்து விட்டதாகவும், 3,551 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உலக சுகாதார மைய செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரீஸ் தெரிவித்து உள்ளார். மேலும் இதில் ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் 9 பேர் பலியாகி விட்டனர். 50 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் காயம் அடைந்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். தொடர் போரால் சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப் படுகிறது.

சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பொது மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சூடானில் தமிழர்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சவூதி அரேபியாவில் உள்ள செட்டாநகர் விமான நிலையத்தில் இந்திய விமான படையை சேர்ந்த 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்திய கப்பல் படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சுமேகா என்ற போர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சூடான் தனது வான் வெளியை மூடி உள்ளதால் உலக நாடுகள் தங்கள் நாட்டினரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles