
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஏர்ஆசியா விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர், விமான பணியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டதோடு, கேப்டனிடம் பேச மறுக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அண்மையில், KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து, லங்காவிக்கு பயணமான AK6310 விமானத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
விமானம் காலை மணி 9.10 வாக்கில் புறப்பட்டிருக்க வேண்டும். எனினும் சரக்கு பிரச்சனை காரணமாக பயணம் தாமதமானது.
காத்திருந்து பொறுமை இழந்த அந்த பயணி, விமான ஊழியர்களை திட்டியதோடு, விமானத்திலிருந்து இறங்குமாறு பணித்த போது, தனது இருக்கையை விட்டு நகர மறுத்துவிட்டார்.
@SophianAzmi என்பவர் தமது டிக் டொக்கில் பதிவிட்டுள்ள அச்சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது.
அந்த வெளிநாட்டவரின் செயலால் விமானப் பயணம் மேலும் தாமதமடைவதை சுட்டிக் காட்டி மற்றொரு பயணி அவரை சாடும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே, தாம் விமான பணியாளர்களை அவமதிக்க வில்லை என அந்த வெளிநாட்டவர் கூறும் காணொளி ஒன்றை, அவரது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த @mdmsue03 எனும் மற்றொரு நபர் தமது டிக் டொக்கில் பதிவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பயணி, விமான கேப்டனுடன் பேசி விட்டு வந்ததும், காலை மணி 10.10 வாக்கில் அவ்விமானம் லங்காவி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், விமான பயணம் நெடுகிலும், அனைவரின் பொறுமையையும் சோதித்ததாக கூறப்படும் அந்த வெளிநாட்டுப் பயணி, லங்காவியில் தரையிறங்கியதும் “கோழைகள்” என கூச்சலிட்டுக் கொண்டே பயந்து ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், ஏர்ஆசியா இதுவரை கருத்துரைக்கவில்லை.
