
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டின் கீழ் தற்போது TEKUN கடனுதவி திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
ஆனால் இதைவிட கூடுதலான நிதியை ஒதுக்கும்படி தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கிடம் அத்துறையின் துணையமைச்சர் டத்தோ ரமணன் பரிந்துரைத்துள்ளார்.
நடப்பு சவாலுக்கு ஏற்ப இந்த ஒதுக்கீடு தேவையென தாம் தெரிவித்த பரிந்துரைக்கு டத்தோ எவோன் இணக்கம் தெரிவித்ததோடு இந்த விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார் என டத்தோ ரமணன் கூறினார்.
அதிகமான தொழில் முனைவர்களுக்கு ஆதரவும் உதவியும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு நாம் சிறந்த முறையில் உதவ முயற்சியை மேற்கொள்வோம் என ரமணன் வலியுறுத்தினார்.
அதோடு இந்திய சமுகம் நன்மைகைளை பெறுவதற்கு SME Corp, கூட்டுறவு ஆணையம், தொழில் முனைவர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் கீழ் உள்ள இதர நிறுவனங்களின் உதவி மற்றும் அவற்றின் நன்மைகளையும் ஆராயும்படி அமைச்சர் தம்மை கேட்டுக்கொண்டதாகவும் ரமணன் தெரிவித்தார்.
புத்தாண்டு தொடக்கத்தில் டத்தோ எவோன் பெனடிக்குடன் நடத்திய சந்திப்பின்போது இவ்வாண்டு அமைச்சிற்கான திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறினார். தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தும் பங்கேற்பை அதிகரிப்பதுடன் ஒத்துழைப்பிற்கான கடப்பாடாகவும் அமைச்சருடனான தமது சந்திப்பு அமைந்ததாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.
