
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில், அவரது மாளிகைக்குள் நுழைந்த மக்கள், கைகளில் சிக்கிய பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்துள்ளது.
டமாஸ்கஸ் நகரில் இருந்த ஆசாத்தின் தந்தை சிலைகளை கிளர்ச்சியாளர்கள் அடித்து நொறுக்கினர்.
மத்திய கிழக்கு ஆசிய நாடான சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. அதிபராக இருந்த பஷர் அல் ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி வந்தனர். துருக்கி ராணுவத்தினர் உதவியுடன் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று தலைநகர் டமாஸ்கசையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து, பஷர் அல் ஆசாத் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.இதையறிந்த அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அம்மாளிகையில் ஏராளமான அறைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
