
தமிழகத்தில், 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, உணவு வழங்கல் துறைக்கு, தமிழக அரசின் மின் ஆளுமை முகமை ஒப்புதல் அளித்து உள்ளது.
புது ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் பரிசீலித்து, கார்டுகள் வழங்க ஒப்புதல் தருவர்.
அரசு சலுகைகளை பெற ஒரே குடும்பத்தில் வசிக்கும் பலர், தனித்தனியாக வசிப்பதாக சொல்லி, ரேஷன் கார்டுக்கு அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. எனவே, விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்த விண்ணப்பதாரர் பெயர், பெற்றோரின் கார்டில் உள்ளதா, தனியாக வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட விபரங்களை, தமிழக அரசின், ‘இ – கவர்னன்ஸ்’ எனப்படும், மின் ஆளுமை முகமை சரிபார்க்கிறது.



