
பெட்டாலிங் மற்றும் கிள்ளான் சுற்றுவட்டாரங்களில் ஏற்படும் வெள்ளச் சம்பவங்களைச் சமாளிக்க சுமார் 177 கோடியே 40 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்நிதியில் 120 கோடி வெள்ளி டாமன்சாரா நதி வெள்ளத் தணிப்புத் திட்டம் (ஆர் டி.பி.) மற்றும் கிள்ளான் மற்றும் ராசாவ் நதிகளில் இரட்டைச் செயல்பாட்டு நீர்த்தேக்கங்களின் நிர்மாணிப்பு ஆகிய நோக்கங்களுக்க பயன்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
எஞ்சிய 57 கோடியே 45 லட்சம் வெள்ளி கிள்ளான் ஆற்று ஆர்.டி.பி. திட்டம், செக்சன் 25, ஷா ஆலம், காப்பார் நதி, ராசா நதி, மேரு நகரம் மற்றும் ராசாவ் நதி போன்ற கிள்ளான் வட்டாரத்திலுள்ள திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
இந்த நிர்வாகம் துவாங்குவின் கண்டனத்தை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறது. மற்ற மாநிலங்களைப் போன்ற நிலையை மக்கள் அனுபவிக்கக் கூடாது என்ற துவாங்குவின் அக்கறையை வெளிப்படுத்தியது.
தாமதங்களைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக இந்த முயற்சியை விரைவு படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை துவாங்கு வெளிப்படுத்தினார். முன்பு பெரும்பாலும் ஏஜென்சி மட்டத்தில் காணப்படும் மெத்தனக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இது நிகழ்ந்தது என்று அவர் சொன்னார்.
இன்று இஸ்தானா ஆலம் ஷாவில் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் 79 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வழங்கிய உரையில் அமிருடின் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூரில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களை ஆய்வு செய்ய மாநில, மத்திய மற்றும் ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.
ஆற்றை ஆழப்படுத்தும், வடிகால்களை அகலப்படுத்தும் திட்டங்கள் மற்றும் வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்பு முயற்சிகளை முன்னெடுப்பதில் மாநிலத்தின் தலைமை குறிப்பாக ஆட்சிக் குழுவின் பங்களிப்பை அவர் வலியுறுத்தினார்.
சுமார் 32 கோடி வெள்ளி செலவிலான மூல நீர் உத்தரவாதத் திட்டம் முழுமையாக முடிவடையும் போது நதி நீர் மாசுபாட்டின் அபாயத்தை மாநில அரசு 90 சதவிகிதம் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
