
சீனாவிலிருந்து வரும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளுக்கு மலேசிய அரசு தடை விதிக்க வேண்டும். மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் இதனை வலியுறுத்தினார். மலேசியாவில் பல சவால்களுக்கு மத்தியில் தங்க நகை வியாபாரம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தற்போது இந்த வணிகத்திற்கு கடுமையான போட்டிகள் வலுத்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள் மலேசியாவுக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த நகைகள் பார்ப்பதற்கு தங்கம் போன்றே இருக்கிறது. இதனால் குறைந்த விலையில் தங்க நகை கிடைக்கிறது என மக்களும் ஏமாந்துபோய் வாங்குகின்றனர். அதை மீண்டும் விற்கும்போது அல்லது உறுக்கிப் பார்க்கும்போதுதான் உண்மை அவர்களுக்கு விளங்கும். இறுதியில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
ஆகவே மக்கள் இதுபோன்ற போலி நகைகளை வாங்க வேண்டாம். இதில் அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதவேளையில் இதுபோன்ற போலி பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.
நகைக் கடைகளுக்கு அரசாங்கம் தற்போது 3 அந்நியத் தொழிலாளர்கள் வரை வழங்கி வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை எங்களுக்கு போதாது.
நகை வணிகம் செய்யும் கடைகளுக்கு குறைந்தது 10 தொழிலாளர்கள் தேவைப்படுகிறது. இக் கோரிக்கையை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
