
பிரதமரின் பத்துமலை வருகை இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும். செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் இதனை வலியுறுத்தினார். மலேசியாவில் வாழும் இந்து மக்கள் வரும் செவ்வாய்க்கிழமை தைப்பூச விழாவை கொண்டாடவுள்ளனர். நாட்டில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு தாய் கோவிலாக பத்துமலை விளங்குகிறது. இதன் அடிப்படையில் இந்த தைப்பூச விழா ஏற்பாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பத்துமலைக்கு வந்திருந்தார். ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா பிரதமரை வரவேற்றார். பத்துமலைக்கு பிரதமரின் வருகை இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும். இதுதான் நம் நாட்டின் மகத்துவம். ஒருவருக்கொருவர் ஒற்றுமைக்கான வலுவான அடித்தளம். மேலும் சுற்றுலா அம்சங்கள் உட்பட பத்துமலை மேம்பாடு குறித்து ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளை பிரதமர் கவனமாகக் கேட்டார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்று டாக்டர் குணராஜ் கூறினார்
