
உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 1405000 வெள்ளி மதிப்பிலான 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.
அந்தத் தேங்காய்கள் டெங்கிலிலுள்ள ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாயப் பொருள் சந்தை வாரியத்தின் நடவடிக்கை மையம், செனாவாங் ஃபாமா நடவடிக்கை மையம் மற்றும் பேராக் மாநிலத்தின் சிம்பாங் பூலாய் ஃபாமா நடவடிக்கை மையம் ஆகியவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்தத் தேங்காய்கள் நாடு முழுவதும் உள்ள 42 ஃபாமா நடவடிக்கை மையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். பின்னர் அவை ஃபாமா சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு சந்தையில் போதுமான அளவு தேங்காய்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.
நாட்டில் தேங்காய் விநியோகம் நிலைத்தன்மை பெறும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அமைச்சு குறிப்பிட்டது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து இந்த தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.



