
நெகிரி செம்பிலான் சிரம்பான் தமிழ் பாதிரியார்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், மாநிலம் முழுவதும் உள்ள 63 தனியார் தேவாலயங்களின் பிரதிநிதிகள், தமிழ் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் சமூக முன்னேற்றம், கல்வி, வழிபாட்டு வசதிகள் மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இதன்போது, மாநிலத்தில் வாழும் தமிழ் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தக்கூடிய சொந்த சமூக மண்டபம் இல்லாததால், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள 63 தேவாலயங்களைப் புதுப்பித்து சீரமைப்பதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.மேலும், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த ஆதரவுகளை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்த அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய மகஜர், சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரின் அரசியல் செயலாளர் மிங் தாய் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.



