
சேதமடைந்த சாலைப் பலகை கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வரை அதிகாரிகளுக்காக காத்திருக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2.5 மீட்டர் உயரமுள்ள மேல்புறக் கட்டமைப்பில் ஏறி சேதமடைந்த உயர வரம்புப் பலகையை அகற்றியுள்ளார் 31 வயதான தனியார் துறை ஊழியர் முகமட் ரஃபி நொரிசான்.
ஜாலான் ஹாஜி மானான் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றது. வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பிற்பகல் சுமார் 3 மணியளவில் சேதமடைந்திருந்த அந்தப் பலகையை ரஃபி கவனித்துள்ளார்.
புயலின்போது அந்தப் பலகை சேதமடைந்திருக்கலாம் எனக் கருதிய அவர், அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து சாலைப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்துள்ளார்.
“2.5 மீட்டர் உயரமுள்ள கட்டமைப்பில் ஏறி, சேதமடைந்த பலகையை அகற்றுவதற்கு நான் இருமுறை யோசிக்கவில்லை. அது தேவையற்ற விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பே அகற்ற வேண்டும் என்று நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.
இந்தச் சாலையை தனது பெற்றோரும் பயன்படுத்துவதாக தெரிவித்த ரஃபி, மற்றவர்களின் குடும்பத்தினரும் இந்த வழியாகச் செல்லக்கூடும் என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகக் கூறினார்.
“எனது பெற்றோர் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதைப் பற்றி நினைத்தேன். மற்றவர்களின் குடும்பத்தினரும் இந்தச் சாலையைப் பயன்படுத்தக்கூடும். அதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன். நடந்த பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை.” என்றார்.
இதையடுத்து, அவர் கட்டமைப்பில் ஏறி, சேதமடைந்த பலகையின் ஆபத்தான பகுதியை வெட்டி அகற்றி கீழே கொண்டு வந்தார்.
தனது நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்காக அல்ல என்றும், சாலைப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அக்கறையாலேயே அவ்வாறு செய்ததாகவும் ரஃபி வலியுறுத்தினார்.
இதற்கு முன்னரும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளதாகவும், சேதமடைந்த சாலை உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சேதமடைந்த பலகையை அகற்றும் அவரது தன்னிச்சையான நடவடிக்கையை பதிவு செய்த 37 விநாடிகள் கொண்ட காணொளி, நேற்று அவரது TikTok கணக்கான Wak Pidot-ல் பகிரப்பட்டது.
ரஃபியின் இந்தச் செயல், சாலையில் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவர் எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.



