
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை மறிக்கும் நடவடிக்கையை அறிவித்ததையடுத்து, உலகளவில் எண்ணெய் விலைகள் திடீரென 8 சதவீதம் உயர்ந்துள்ளன.
வர்த்தகத் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் ஒப்பந்தம்) பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7.76% உயர்ந்து பீரல் ஒன்றுக்கு 102.59 அமெரிக்க டாலராக உயர்ந்தது. அதேசமயம், WTI (மே ஒப்பந்தம்) 8.2% உயர்ந்து 104.51 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
இந்த உயர்விற்கு காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்திருப்பது குறிப்பிடப்படுகிறது. முன்னதாக, இரு நாடுகளும் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், அமெரிக்க பிரதிநிதிகள் ஒப்பந்தமின்றி திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் மற்றும் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் மறியல் (blockade) அமுல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், ஈரானுக்கு கட்டணம் செலுத்தி அந்த நீரிணையை கடக்கும் கப்பல்களை கண்காணித்து தடுக்க அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) தெரிவித்ததாவது, ஏப்ரல் 13 ஆம் தேதி GMT நேரப்படி பிற்பகல் 2 மணிமுதல், ஈரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து கடல் போக்குவரத்துகளும் தடுக்கப்படும்.
இந்த நிலைமை, உலகளவில் எண்ணெய் சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்த கட்டத்தில் பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
