
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 100-ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலரும், வைகாசி விசாக உபய அறங்காவலருமான பெ. சந்திரசேகரன், உபய நாட்டாமை க. பூபாலன் மற்றும் உபய பிரதிநிதிகளான கு. கோவிந்தசாமி, கி. ஜெயகணேசன் ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த உபய நிகழ்வில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா – புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா தம்பதியர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும், தேவஸ்தான அறங்காவலர்கள் டத்தோ சிவக்குமார், கதிரேசன், நாராயணசாமி, செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன் மற்றும் மலேசிய சிலம்ப கழகத்தின் தேசிய துணைத் தலைவர் ஆர்.டி. உதயகுமார் உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய அங்கமாக, எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் 19 பேருக்குப் பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய மின்சார வாரியத்தில் பணிநிறைவு பெற்ற 25-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்யப்பட்டது.
வைகாசி விசாக உபய வழிபாடுகளைச் சிவஸ்ரீ சிவகுமார் மற்றும் சிவனாந்தா குருக்கள் ஆகியோர் ஆகம விதிமுறைப்படி பக்திப் பெருக்குடன் நடத்தி வைத்தனர். இந்நிகழ்வில் டிஎன்பி (TNB) பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் சுவையான அன்னதானம் பரிமாறப்பட்டது.



