
16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது. மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண், யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் படி அடுத்த 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமினுடின் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, கடந்த சில வாரங்களாக மாநில அரசியலில் நிலவி வந்த பரபரப்பு மற்றும் நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடந்த மாதம், யாங் டி-பெர்துவான் பெசாரை பதவியிறக்கம் செய்யக் கோரிய நான்கு மசோதாக்கள் தொடர்பாக மாநில அரசு செயல்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த தேசிய முன்னணியின் (BN) 14 சட்டமன்ற உறுப்பினர்கள், அமினுடினுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதாக அறிவித்தனர். இதன் பின்னர் மாநில அரசின் நிலைத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
பின்னர் அம்னோ தலைமையகம் தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தாலும், நம்பிக்கை கூட்டணி (PH) மற்றும் அம்னோவின் சில தலைவர்கள் மாநில அரசியல் நிலையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி சட்டமன்றத்தை கலைத்து மக்களிடம் புதிய ஆணையைப் பெறுவதே என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, மாநில சட்டமன்ற கலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், நெகிரி செம்பிலான் மாநில அரசியல் களம் தற்போது தேர்தல் சூட்டில் நுழைந்துள்ளது.


