
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மடானி அரசாங்கத்தின் தேர்தல் ஒத்துழைப்பு இடம்பெறாது என்றும், அனைத்து 56 மாநிலத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி (BN) தனித்து போட்டியிடும் என்றும் அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் அண்மையில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தலுக்கான அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய முன்னணியின் தேர்தல் திட்டம் குறித்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தேர்தலில் தொகுதி மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் நம்பிக்கை கூட்டணி (PH) தலைவர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒத்துழைப்பு அடிப்படையிலான ஒரு உடன்பாட்டை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும், ஜொகூர் மாநிலத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் தனது முடிவில் தேசிய முன்னணி எந்த மாற்றமும் செய்யவில்லை என்று ஜாஹித் வலியுறுத்தினார். மாநில மக்களிடமிருந்து நேரடி ஆதரவைப் பெறும் நோக்கில், 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றார்.
மேலும், அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜொகூர் மாநிலத் தேர்தல், தேசிய அரசியலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுவதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.


