
தேசிய போலீஸ் படையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றிய துணை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சே, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “போலீஸ் சீருடையை அணியும் எனது கடைசி நாள் இந்த ஞாயிற்றுக்கிழமை. சுமார் 35 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிய பிறகு, இந்த நாளுடன் எனது சேவை நிறைவடைகிறது,” என்றார்.
“பெண்டாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை: டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சேயின் நேர்மைப் பயணம்” என்ற அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ அயோப் கான், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவின் துணை போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன்பு அவர், ஜொகூர் மாநில போலீஸ் தலைவர், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச் செயல்களை ஒடுக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
நேர்மை, கண்டிப்பான நிர்வாகம் மற்றும் தொழில்முறை சேவைக்காக அறியப்படும் அயோப் கான், மலேசிய போலீஸ் படையின் முக்கிய தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.



