
15வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தேசிய முன்னணி (BN) தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அக்மட் ஜாஹித் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் “பாங்காக் நகர்வு” அல்லது “துபாய் நகர்வு” என்ற பெயரில் அரசியல் முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படும் தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாங்காக் நடவடிக்கை என்றோ, துபாய் நடவடிக்கை என்றோ எந்த அரசியல் இயக்கமும் இல்லை. அவை அனைத்தும் ஆதாரமற்ற ஊகங்களே,” என்றார்.
மேலும், முன்னாள் யாங் டி-பெர்துவான் அகோங்கின் வேண்டுகோளின் பேரில் தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தில் இணைய ஒப்புக்கொண்டபோது, 15வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று உறுதியளித்தோம். அந்த உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஜாஹித் ஹமிடி வலியுறுத்தினார்.
அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களும் விளக்கங்களும் பரவி வந்தாலும், தேசிய முன்னணியின் நிலைப்பாடு தெளிவானது என்றும், ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய முன்னணி தனது வாக்குறுதியை மதித்து, 15வது நாடாளுமன்றத்தின் காலம் நிறைவடையும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து இடம்பெறும்,” என்று ஜாஹித் ஹமிடி கூறினார்.



