
இலங்கை யாழ்ப்பாணம், நாவற்குழியிலுள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஈழத் தாயக புரட்சிப் பாடல்களைப் பாடியதாகக் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த கணேசுகுமார் சங்கீதன் என்ற பாடகரை சாவகச்சேரிப் பகுதியில் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாகக் கண்டிக்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
தன் இன வீரம், தன் மண் வரலாறு, தன் இனத்திற்கு நேர்ந்த வலிகளைப் பாடும் சொல்லிசைக் கலைஞரான தம்பி சங்கீதன், அந்த நிகழ்ச்சியில் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியதையும், ஏற்கனவே தன் இசை சேகரிப்பில் பாடிய சொல்லிசை எழுச்சிப் பாடல்களைத் தனது சமூக ஊடகங்களில் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.
அதில் குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவியதால், சிங்களர்களிடையே கடுமையான விமர்சனங்களும் இனவாதக் கருத்துக்களும் எழுந்ததைத் தொடர்ந்தே, இந்தக் கைது நடைபெற்றதாக அறியப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பின்னர் “இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம்” என்று கொக்கரித்த சிங்களப் பேரினவாத அரசு, இன்றும் ஒரு எழுச்சிப் பாடலுக்காக அஞ்சுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
உலகத் தமிழர்கள் இவற்றையெல்லாம்கவனித்துக் கொண்டுதான் இருகிறார்கள். தன்னாட்சி உரிமைக்காக போராடிய விடுதலை இயக்கமான தமிழீழ இராணுவம் முடிவுக்கு வந்த பின்னரும் அவர்கள் மீதான தடையை இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து நீட்டித்து, அதனூடாக ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தலையும் இனியும் அனுமதிக்க முடியாது.
இதற்கு ஒரே தீர்வாக, தமிழீழ விடுதலை இயக்கம் மீதான தடையை அகற்றப்பட வேண்டும் எனவும் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதன் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி தமதறிக்கையில் கேட்டுக்கொண்டார்.



