
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
35 வயதான கோபிநாத்தை அவரது கடைசியாக அறியப்பட்ட முகவரியில் தொடர்புகொள்ள அரசுத் தரப்பு பலமுறை முயற்சித்தபோதிலும், அவரது தற்போதைய இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி நோர்டின் ஹாசன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசுத் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற நான்கு பேரின் விடுதலையை ரத்து செய்து, அவர்களிடம் தற்காப்பு வாதம் கேட்க உத்தரவிட்டிருந்தது. ஜே. ராகசுதன், எஸ். கோகுலன் மற்றும் சம்பவம் நடைபெற்ற போது சிறுவர்களாக இருந்த இருவர் ஆகியோர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, புதிய விசாரணை தேதிகளை நிர்ணயிப்பதற்கான வழக்கு வரும் ஜூலை 3ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இசைக் கலைஞராக உருவாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்த 18 வயது T. நவீன், கடந்த 2017ஆம் ஆண்டு பினாங்கில் நடைபெற்ற கொடூரமான பகடிவதைத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.



