
லாபு 4 தமிழ்ப்பள்ளிக்காக மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ள 6 ஏக்கர் புதிய நிலத்தில் புதிய பள்ளிக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான RM9 மில்லியன் நிதி, அண்மையில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியின் மூலம் வெற்றிகரமாக திரட்டப்பட்டது.
அந்த நிகழ்வில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் RM2 மில்லியன் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று அந்தோணி லோக் லாபு 4 தமிழ்ப்பள்ளிக்கு நேரில் வருகை தந்து, பிரதமரின் சார்பில் வழங்கப்பட்ட RM2 மில்லியன் தொகை பள்ளியின் பள்ளி நிர்வாக சபை (LPS) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இதன் மூலம் புதிய பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கான நிதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதி உதவி, லாபு 4 தமிழ்ப்பள்ளியின் நீண்டகால கட்டடத் தேவையை நிறைவேற்றுவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், மாணவர்கள் சிறந்த கல்விச் சூழலில் பயிலும் வாய்ப்பை உருவாக்கும் என பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


