
நெகிரி செம்பிலான்: இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் நம்பிக்கை கூட்டணி (Pakatan Harapan) தனது அர்ப்பணிப்பை ஏற்கனவே செயல்படுத்தி நிரூபித்துள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ஆம் ஆண்டு முதல் நம்பிக்கை கூட்டணி தலைமையிலான நெகிரி செம்பிலான் மாநில அரசில், இரண்டு இந்தியர்கள் மாநில ஆட்சிக்குழு (EXCO) உறுப்பினர்களாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
“இது தேர்தல் காலத்தில் வழங்கப்படும் புதிய வாக்குறுதி அல்ல. நம்பிக்கை கூட்டணி ஏற்கனவே செயல்படுத்தி, நடைமுறையில் நிரூபித்துள்ள ஒரு உண்மை,” என்று டாக்டர் குணராஜ் கூறினார்.
மேலும், சிலாங்கூர், பினாங்கு உள்ளிட்ட நம்பிக்கை கூட்டணி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்திய சமூகத்திற்கு ஆட்சிக்குழு மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமின்றி, கல்வி, தொழிற்கல்வி (TVET), தொழில்முனைவு மேம்பாடு, MITRA திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற துறைகளிலும் உண்மையான வாய்ப்புகளை உருவாக்குவதே நம்பிக்கை கூட்டணியின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
“இந்திய சமூகத்திற்கு வெறும் தேர்தல் வாக்குறுதிகள் தேவையில்லை. நிரூபிக்கப்பட்ட செயல் பதிவுகளும், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கைகளும்தான் தேவை. அதையே நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து செய்து வருகிறது,” என்று டாக்டர் குணராஜ் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலிலும், அனைத்து சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் அரசாக நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



