
லாபிஸ் மற்றும் சிகாமாட்டில் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மின் சுடலை கட்டுமான பணிகள் குறித்து பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் ஜொகூர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இவரின் கேள்விக்கு ஜொகூர் மாநில அரசாங்கம் பதிலளித்துள்ளது. இவ்விரு இடங்களிலும் மின் சுடலை நிறுவும் பணிகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு 15 லட்சத்து 50,000 வெள்ளியை ஒதிக்கீடு செய்துள்ளது. சாலை, மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்தவும் கட்டிடத்தின் பழுது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் பிற உபகரணங்களை வாங்குவதற்கும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிகாமாட், குவாந்தான் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் சுடலை மையத்தில் மின்சார இணைப்பிற்கான விண்ணப்பத்தை 2017-ஆம் ஆண்டு தாங்கள் பெற்றதாக தெனகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் கூறியுள்ளது. இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட தெனகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் அதன் மின்சார இணைப்பிற்கான கட்டணத்தை 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது. எனினும், மின்சார இணைப்பிற்கான 29 ஆயிரத்து 505 வெள்ளி கட்டணத்தை 3 வருடங்களாக தெனகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்திடம் செலுத்த தவறிய காரணத்தினால் இவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தற்போது, மின்சாரம் இணைப்பிற்கான மறு விண்ணப்பம் கோரும் பணிகளைப் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக ஜொகூர் மாநில மேம்பாட்டு அலுவலகம் கூறியுள்ளது. லாபிஸ் மற்றும் சிகாமாட்டில் நிறுவப்படும் மின் சுடலை கட்டுமான பணிகளில் காணப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தீவிரம் காட்டி வருவதாக சிகாமாட் பொதுப்பணித் துறை கூறியுள்ளது. புதிய ஒப்பந்ததார் நியமிக்கப்பட்டதும், இவ்விரு மின் சுடலைகளின் எஞ்சிய கட்டுமான பணிகள் துவக்கம் பெறும். லாபிஸ் மின் சுடலை மையத்திற்குள் நுழைய தடையாக இருந்த தனியார் நில விவகாரமும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, லாபிஸ் மற்றும் சிகாமாட்டில் மின் சுடலை அமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி அடைந்து மக்கள் பயன் பெறுவார்கள் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
