
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன்,பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடாமல் போயிருந்தால் அது ” 30 நாள் அரசாங்கம்” என்ற நிலை ஏற்பட்டிருக்கும் என பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடீன் அப்துல் ரஹ்மான் கூறினார். 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மிகவும் சிறியது என்பதால் அரசாங்கம் எந்த நேரத்திலும் கவிழும் ஆபத்து உள்ளது. இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தை தற்காத்து கொள்வதோடு தத்தம் கட்சிகள் தங்களை பலப்படுத்திக் கொண்டு அடுத்தாண்டு பொதுதேர்தலை நடத்துவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது என்றார். அந்த நிலையில்தான் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளைப் போன்று,எதிர்க்கட்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 3 மில்லியன் வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து வரும் பொதுத்தேர்தலுக்காக கடுமையான பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டால் அதோடு இந்த அரசாங்கத்தின் கதி முடிந்து விடும் என கூறினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படாமலிருந்தால் நமக்கு இரண்டு வார கால பிரதமர் மட்டுமே அமைந்திருப்பார் என தாஜூடீன் அப்துல் ரஹ்மான் மேலும் சொன்னார்.
