
1800-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் தமிழர்களின் தந்நேரிலாத் தலைவராகத் திகழ்ந்த கா. தம்புசாமி பிள்ளை, குதிரை வண்டியில் பயணம் செய்யும் வேளையில் ஆங்கிலேய அதிகாரிகள்கூட நிமிர்ந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் அளவுக்கு செம்மாந்து திகழ்ந்தவர்.
உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்று விளங்கும் சுற்றுலாத் தலமும் ஆன்மிக மையமுமான பத்துமலை திருமுருகன் திருக்கோயில்; தலைநகர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம்; கோலாலம்பூர் விக்டோரியா பன்னாட்டுப் பள்ளி ஆகியவற்றின் நிறுவனர்; எல்லாவற்றுக்கும் மேலாக, மலாயாவில் ஈயச்சுரங்க உரிமையாளராக புகழ்பெற்ற முதல் தமிழர்; அதனிலும் மேலாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் தார்ச்சாலைகளை நிருமாணித்த முதல் குத்தகையாளர்;
அள்ளிக் கொடுக்கும் கொடைமனம் கொண்ட இவர், செந்தூல் வட்டாரத்தில் தமிழ்ப் பள்ளியையும் உருவாக்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிலாங்கூர் மாநில கருவூலப் பொறுப்பாளராகவும் பதவி வகித்த தம்புசாமி பிள்ளை எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவர். அவரின் நினைவு, மலேசியத் தமிழர்தம் நெஞ்சத்தில் எந்நாளும் நிறைந்திருக்கும்.



