
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் வெ.1,500 என அரசாங்கம் அறிவித்ததில் பல குழப்பங்கள் நிலவுவதாகவும் குறிப்பாக, இந்தக் குறைந்தபட்ச சம்பள முறை நாடு முழுவதுக்குமா அல்லது நகர்ப்புறங்களுக்கு மட்டுமா என்பதில் தெளிவில்லை என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
கூச்சிங், சரவாக், கோத்தா கினபாலு, சபா போன்ற மேற்குக் கரை, ஜோகூர் போன்ற தென்பகுதியைச் சேர்ந்த நகர்ப்பகுதிகளில் ஏற்கெனவே 1,500 வெள்ளிக்கு நெருக்கமாக குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படுகிறது.
ஆனால், பகாங், கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட தீபகற்ப மலேசியாவின் கிராமப் பகுதிகளிலும் தோட்டப்புறங்களிலும் உள்ள சிறிய நிறுவனங்களால், திடீரென்று 1,100 வெள்ளி சம்பளத்தை 1,500 வெள்ளிக்கு உயர்த்த முடியாது என்பதை அரசு கவனிக்க வேண்டும் என்று ஓங் கியான் மிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
