
எல்ஆர்டி, எம்ஆர்டி, மோனோ ரயில் உள்ளிட்ட இலகு ரயில் சேவை, ரேப்பிட் கேஎல் பேருந்து சேவை, கேடிஎம் பாரம்பரிய ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரவு வசதியையும் கிள்ளான் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற மக்கள் இன்று முதல் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.
‘எம்ஆர்டி புத்ராஜெயா முதல் தடத்’தை பிரதமர் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இதன் தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரேப்பிட் கேஎல்-இன் கீழ் இலவச பொது போக்குவரத்து சேவைகளுக்காக வெ.140 மில்லியனும் KTM சேவைக்காக வெ.15 மில்லியனும் என மொத்தம் 155 மில்லியன் வெள்ளியை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு மாத இலவச பொதுப் போக்குவரவு சேவைக்காக அரசு ஒதுக்கி உள்ளது என்று அறிவித்தார்.
பொது மக்கள் இந்த சேவையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல; எப்பொழுதும் மக்கள் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்டுத்தினால் சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் பிரதமர் பேசினார்.
