
இந்தியாவின் தொழில் முனையமும் வர்த்தக மையமுமான மகாராஷ்டிர மாநிலம், புனேவில் வசிப்பவர் 43 வயதான பாஸ்கர் வாக்மரே. கொரோனா பருவத்திற்குப் பின் 2021-ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புத் தேர்வை, இவரும் இவரின் மகனும் ஒன்றாக எழுதினர்.
குடும்ப சூழல் காரணமாக 7-ம் வகுப்புடன் கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டு, வேலைக்கு சென்ற பாஸ்கர், காலவோட்டத்தில் மணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றார். இந்தச் சூழலில் தன் கல்விப் பயணத்தைத் தொடர நினைத்த அவர், வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அன்றாடம் தன் மகனின் பாட நூல்கள் அத்தனையையும் தன் மகனிடம் கேட்டுக் கேட்டு படித்துள்ளார்.
அரசத் தேர்வு வாரியத்தின் அனுமதி பெற்று 10-ஆம் ஆண்டு தேர்வை எழுதினார். இரு தினங்களுக்கு முன் தேர்வு முடிவு வந்தபோது பாஸ்கர தேர்ச்சி பெற்றார்; மகன் தேர்ச்சி பெறவில்லை.
30 ஆண்டுகளுக்குப் பின், தன்னுடைய வாழ்க்கையில் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும் வீட்டில் தனக்கு சொல்லிக் கொடுத்த மகன் தேர்ச்சி பெறவில்லையே என்று பாஸ்கர் வாக்மரே வருந்துகிறார்.
