
கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் பெற்றுவரும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரம் தீவிரமாக செயல்பட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தி உள்ளார்.
தேர்தலுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படாத போதிலும் செயலாக்கப் பணிகள் தீவிரப்படுத்தப்படுவது அவசியம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத் தலைவருமான அவர் கூறினார்.
நடப்புச் சூழல் மிகவும் சவால்மிக்கதாக உள்ளது. நம்மை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற நம் எதிரிகள் காத்திருக்கின்றனர். நம்மை வீழ்த்தியவர்கள் நம்முடன் உறவு கொள்ள விழைகின்றனர். இம்மாநிலம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். செல்வ வளமிக்க மாநிலத்தை நிர்வகிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
