
மலேசிய இந்திய சமுதாயத்திற்காக இதுவரை வரையப்பட்ட பெருந்திட்டங்கள், மாநில அரசுகளின் சமூக-பொருளாதாரத் திட்டங்கள் யாவும் தொடர்ந்து மேற்கொள்ளப்படாததால் தொய்வடைந்துள்ளன.
இந்த நிலையில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்திய சமுதாய மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஜூலைத் திங்கள் 3-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், Wyndham Acmar தங்கும் விடுதியில் நடைபெற உள்ளது.
இதில், டாக்டர் முகமட் காலிட் நோர், மனோகரன் மொட்டையன் உள்ளிட்ட அரசியல், சமூக, பொருளாதார, கல்வி வல்லுநர்கள் உரையாற்ற விருக்கின்றனர். 25-க்கும் மேற்பட்ட இந்திய அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருக்கும் இந்த மாபெரும் நிகழ்ச்சி குறித்து, இதன் தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் ஆகியோர் அறிவித்தனர்.
இந்திய சமுதாயத்தின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் கல்வி-வேலைவாய்ப்பு சிக்கல், தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் தடங்கல், சமூக-பொருளாதார மீட்சி, இந்தியர்களின் தொழில்-வர்த்தகம் குறித்தெல்லாம் இதில் ஆழமாக பேசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
